கொய் மலர் சாகுபடியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முன்னோடியாக உள்ளது - ஆட்சியர் பெருமிதம்...

First Published Dec 18, 2017, 8:58 AM IST
Highlights
Krishnagiri district is the forerunner of the kodi flower culture - Collector


கிருஷ்ணகிரி

கொய் மலர் சாகுபடியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முன்னோடியாக உள்ளது என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் மாவட்ட அளவில் கொய்மலர் சாகுபடி குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு தொடங்கியது.

இதனை, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தொடக்கிவைத்து கொய்மலர் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த கையேட்டை வெளியிட்டார்.

இயற்கை வேளாண்மை குறித்து பெங்களுரு ஐ.சி.ஏ.ஆர் முதன்மை விஞ்ஞானி முனைவர் ஜி.சிவகுமார், பூச்சி தாக்குதல் குறித்து முதன்மை விஞ்ஞானி எம்.சிவகுமார் உரையாற்றினார்.

அப்போது மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் பேசியது: "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம் பகுதியில் நெல் பயிர்களும், பர்கூர், மத்தூர் பகுதியில் மா உற்பத்தியும், சூளகிரி, தேன்கனிக்கோட்டை பகுதியில் காய்கறிகளும், ஒசூர், தளி பகுதியில் பல வகையான பூக்கள் விளையக் கூடிய வகையில் தட்பவெப்ப நிலை உள்ள மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டமாகும்.

தளி பகுதியில் கொய்மலர் சாகுபடி பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதன்மூலம் தமிழகத்தில் கொய் மலர் சாகுபடியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முன்னோடியாக உள்ளது.

இதேபோல, தேன்கனிக்கோட்டையில் நாட்டு இன பசுக்களைக் காப்பாற்றும் வகையிலும் மழைவாழ் மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் மகளிர் குழுக்கள் மூலம் நாட்டு பால் கொள்முதல் செய்து லிட்டர் பாலுக்கு ரூ.40 கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இயற்கை முறையில் இடு பொருள்களை பூச்செட்டிகள் மற்றும் காய்கறி உற்பத்திக்கு பயன்படுத்தி அதிகபடியான மகசூலை பெற வேண்டும்.

கால்நடை சாணத்தை பயன்படுத்தி தொழு உரம் தயாரிக்க வேண்டும். பூச்சி மருந்துகளை குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும்" என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சி.கண்ணன், துணை இயக்குநர் ஜி.சீனிவாசன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் சிதம்பரம், சிசகுமாலரப்பா, செந்தில்குமார், வட்டாட்சியர் பூசன்குமார், மாநில விவசாயிகள் சங்க தலைவர் இராமகௌண்டர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

click me!