டல் அடிக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டம்; ஆன்லைன் பத்திரப்பதிவில் பெரும் சிக்கல்; மக்கள் அவதி...

First Published Dec 18, 2017, 8:37 AM IST
Highlights
Digital India Project The problem with online bookmarking People are suffering ...


கரூர்

டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆன்லைன் பத்திரப்பதிவு முறையில் அடிக்கடி ஏற்படும் சர்வர் பிரச்சனை ஏற்படுவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

"டிஜிட்டல் மயமாக்கும்" திட்டத்தின் கீழ் பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆன்லைன் பதிவு முறை தமிழகம் முழுவதும் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக மொத்தம் உள்ள 548 பத்திரப்பதிவு அலுவலகங்களில் 50 அலுவலகங்கள் சோதனை முறையில் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து இனி சார்-பதிவாளர் அலுவலகங்களில் மணிக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டாம் என மக்கள் எண்ணினர். ஆனால், ஆன்லைன் முறை அமல்படுத்தப்பட்ட நாளான ஆகஸ்ட் 1 முதல் சர்வர் பிரச்சனையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையுடன் கூறியது: "கரூர் மாவட்டம், மேலக்கரூரில் செயல்படும் சார்-பதிவாளர் அலுவலகத்தில் முன்பிருந்த பழைய முறையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்படும்.

ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டிய பத்திர ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த பத்திர ஆவணங்களை சார்-பதிவாளர் படித்துப் பார்த்து முறையாக இருந்தால் அதற்கு ஒப்புதல் தருவார். அதன்பின்னர் பத்திரங்களின் நகல்களை எடுத்துக்கொண்டு மீண்டும் பத்திரப்பதிவு அலுவலகத்துக்குச் சென்று சார்-பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டியுள்ளது.

இவை நடைமுறை தான் என்றாலும், அடிக்கடி ஏற்படும் சர்வர் பிரச்சனையால் சார்-பதிவாளார் நாள்தோறும் 4 முதல் 5 பத்திரங்கள் கூட பதிவு செய்வதில்லை" என்று தெரிவித்தனர்.

தமிழகத்தில் எங்கு சொத்து வாங்கினாலும் அதை எந்த சார் -பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்து கொள்ளலாம் என்ற வசதிக்காகவே ஆன்லைன் பதிவு நடைமுறை கொண்டு வரப்பட்டது. ஆனால், சர்வர் பிரச்சனை போன்றவற்றால் இந்த திட்டம் தோல்வியடைந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

மக்களின் இந்த சிரமத்தை விரைவில் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பழைய முறையை பின்பற்ற வேண்டும் என்று மக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

 

click me!