கிருஷ்ணகிரி
ஒசூரை முன்மாதிரி நகரமாக்கும் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் 29-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில், வியாபார்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் நகராட்சி ஆணையாளர் எம்.செந்தில்முருகன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், "உலக வங்கியின் முன்மாதிரி நகரத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒசூர் நகராட்சிக்குச் சொந்தமான பழைய நகராட்சி கட்டடம், வசந்த நகர், எம்.ஜி.ஆர் சந்தை, காந்தி சிலை அருகில், பழைய பெங்களூர் சாலை மற்றும் புதிய நகராட்சி அருகில் பல அடுக்குமாடி வணிக கட்டடம், கல்யாண மண்டபம் உள்ளிட்ட பல் நோக்கு அரங்கு, வங்கி கட்டடம் போன்ற கட்டடங்கள் கட்ட ஒசூர் நகராட்சியால் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக முதலீடு செய்ய முன்வரும் வணிக நிறுவனங்கள், வங்கிகள், நகைக் கடை வணிகர்கள் உள்ளிட்ட வியாபாரிகள் மற்றும் தகவல் தொடர்பு, மென்பொருள் நிறுவனங்கள் தங்களின் கருத்துகளை வரும் டிசம்பர் 29-ஆம் தேதி நகராட்சிக் கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்.
இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரை நகராட்சி அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமோ பதிவு செய்து கொள்ளலாம்" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.