ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்து, அவரையே ஏமாற்றி நல்லவர்போல் நடித்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சசிகலா குடும்பத்தினர் சொத்து சேர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்ககளை சந்தித்தார். அப்போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவது அதிமுக தொண்டர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
சுயமாக தன்னாட்சியுடன், ஆதாரத்துடன் வருமானவரி சோதனை நடந்து வருவதாகவும் சோதனையில் பல்வேறு ஆதாரங்கள், ஆவணங்கள் சிக்கியுள்ளதே அதை உறுதிப்படுத்துகிறது என்றும் தெரிவித்த முனுசாமி இதில் மத்திய, மாநில அரசின் பங்கு ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.
சசிகலா குடும்பத்தை சேர்ந்த விவேக் என்பவர் என்ன தொழில் செய்கிறார்? அவருக்கு எப்படி ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பீனிக்ஸ் மால் வந்தது? என கேள்வி எழுப்பிய அவர், சாதாரண நிலையில் ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்து, அவரையே ஏமாற்றி நல்லவர்போல் நடித்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சசிகலா குடும்பத்தினர் சொத்து சேர்த்துவிட்டதாக தெரிவித்தார்.
1996- ஆம் ஆண்டு ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆனால் தற்போது சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடைபெறும் சோதனை அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கே.பி.முனுசாமி கூறினார்.