சென்னையில் இரவில் பெய்த கனமழை... சாலைகளில் பெருகிய வெள்ளம்...

First Published Nov 12, 2017, 11:28 PM IST
Highlights
heavy rain hits chennai today evening affects road traffic


சென்னை நகரின் பல பகுதிகளில் இன்று இரவு கன மழை பெய்தது. சென்னையின் மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, நந்தனம் கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.

வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கியது முதலே, கன மழை பெய்துவருகிறது. வழக்கத்தை விட ஒரு வாரம் தாமதாக பருவமழை தொடங்கினாலும், சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.  

குறிப்பாக, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.  இதனால் இந்த  மாவட்டங்களில் உள்ள பல குடியிருப்புப் பகுதிகள் மழை நீரில் மூழ்கின. எனினும், சென்னை மக்களின் குடிநீர்க்கு ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்தது.

இந்த மாதத் தொடக்கத்தில் சென்னையில் அதிகமாக பெய்த கனமழையால் மாநகரமே ஸ்தம்பித்தது. பல குடியிருப்புகள் நீரில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். 

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மழை சற்று ஓய்ந்திருந்தாலும், விட்டு விட்டு மழை பெய்தது. சென்னையில் தாழ்வான பகுதிகள் மற்றும் பள்ளி வளாகங்களில் தேங்கியிருந்த மழைநீர் வடிய தொடங்கி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்டன.

சென்னையின் பல இடங்களில் நேற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் மழை பெய்தது. இதனிடையே, தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் அடுத்த 48 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. 

இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கிண்டி, நந்தனம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. மாலை நேரமே கொட்டித் தீர்த்த கன மழையால், பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 

இதனிடையே சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை ... அடை மழை பெய்யும் பட்சத்தில் விடுமுறை பற்றி நாளை காலை அறிவிக்கப்படும்  என்று மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தகவல் தெரிவித்துள்ளார்.

click me!