மேலும் ஒரு ஆசிரியர் கைது.. பாலியல் அத்துமீறல்கள்.. அடுத்தடுத்த தற்கொலைகள்.. எப்பொழுது தீர்வு.?

By Thanalakshmi VFirst Published Dec 25, 2021, 5:06 PM IST
Highlights

கோவையில் ஆன்லைன் வகுப்பிற்கு மேல் சட்டை இல்லாமல் வருவதாகவும், அவ்வப்போது வாட்ஸ் அப்பில் தவறாக குறுஞ்செய்தி அனுப்புவதாகவும் மாணவிகள் அளித்த புகாரில் பேரில் அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பணிபுரியும் கணிணி அறிவியல் ஆசிரியர் விஜய் ஆனந்த் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகளை எடுக்கும் இவர், மாணவிகள் சிலருக்கு ஆசிரியர் விஜய் ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

குற்றச்சாட்டப்பட்ட ஆசிரியர் விஜய் ஆனந்த், ஆன்லைன் வகுப்பின்போது, மாணவிகளுக்கு தனியாக வீடியோ கால் செய்து தொல்லை கொடுப்பதாகவும், கம்யூட்டர் கிளாஸ்க்கு போகும் போது தேவை இல்லாமல் தொட்டுத் தொட்டு பேசுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆன்லைன் வகுப்பு என்று கூறி மாணவிகளுக்கு தனியாக வீடியோ கால் செய்து, டி ஷர்ட் அணியுமாறும், வீட்டில் யாரும் இல்லையா எனக் கேட்டு ஆபாசமாக நடந்துகொள்ளுவதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் ஆன்லைன் வகுப்பின் போது வீடியோ காலில் மேல் சட்டை இல்லாமல் வருகிறார் என்று கூறும் மாணவிகள் பாடங்களை தாண்டி ஸ்நாக்ஸ் வாங்கி தருகிறேன் என்றெல்லாம் பேசுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து வெளியே சொன்னால் செய்முறை தேர்வில் மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. அவரும் ஒரு வாரத்திற்கு முன்பு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இப்பிரச்னை தொடர்பாக தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஆனால், இதுவரை குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறிய மாணவ, மாணவிகள் ஆசிரியரை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனிடையே சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் கீதா மாணவிகளிடம்  விசாரணை நடத்தினார். பின்னர்  விஜய்ஆனந்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் மாணவிகள்  ஆசிரியர் விஜய் ஆனந்தின் அத்துமீறல் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆன்லைன் வகுப்பிற்கு மேல் சட்டை இல்லாமல் வருவதாகவும், அவ்வப்போது வாட்ஸ் அப்பில் தவறாக குறுஞ்செய்தி அனுப்புவதாகவும் புகாரில் தெரிவித்து இருந்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்ட பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்த கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர், போத்தனூர் பகுதியில்  வீட்டிலிருந்த ஆசிரியர் விஜய் ஆனந்தை கைது செய்தனர். மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் விஜய் ஆனந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!