
காலமானார் கவிக்கோ அப்துல் ரகுமான்…. சென்னை பனையூரில் இன்று அதிகாலை உயிர் பிரிந்ததது…
கவிக்கோ அப்துல் ரகுமான் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.
கவிக்கோ அப்துல் ரகுமான் மதுரை கிழக்கு சந்தைப் பேட்டையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் உருதுக் கவிஞர் சையத் அஹமத் – ஜைனத் பேகம் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பயின்றார். தொடர்ந்து மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றார்.
அப்பொழுது முனைவர் மா. இராசமாணிக்கனார், ஔவை துரைசாமி, அ. கி. பரந்தாமனார், அவ்வை நடராசன், அ. மு. பரமசிவானந்தம் ஆகிய தமிழறிஞர்களிடம் பயின்றார்.
சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய ச. வே. சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார்.
தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் அப்துல் ரகுமான் குறிப்பிடத்தக்கவர். வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு நீண்ட கால நண்பர் . திமுக ஆட்சியில் வக்பு வாரிய தலைவராக இருந்தார். 1999 ஆண்டு அவர் எழுதிய ஆலாபனை என்ற கவிதை நூலுக்காக சாகித்ய அகாடமி விருத் பெற்றார்.
சென்னை பனையூரில் வசித்து வந்த அவர் இன்று அதிகாலை 2 மணிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.