
கடந்த 4ம் தேதி துவங்கிய கத்திரி வெயில், 28ம் தேதி முடிவடைந்தது.இந்த 25 நாட்களில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 டிகிரிக்கு குறையாமல் வெயில் வாட்டி வதைத்தது. மக்கள் வெளியே தலையை காட்டாமல், வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை காலம் துவங்கியுள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் மழை பரவலாக பெய்து வருகிறது. வெயிலின் அளவும் குறைய துவங்கி உள்ளது.
தென்மேற்கு பருவமழை, மே 30ம் தேதி, துவங்கியது. அரபிக்கடலில் இருந்து வீசும் தென்மேற்கு பருவக்காற்று வலுவாகி உள்ளதால், அதனை ஒட்டி அமைந்துள்ள கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, கோவா ஆகிய மாறிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
வங்ககடல் பகுதியில், தென்மேற்கு பருவமழையின் நிழற் பகுதிகளான அசாம், மேகாலயா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும், பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் முதற்கட்டமாக, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் எல்லையோர பகுதிகளில் மழை துவங்கி உள்ளது. மற்ற இடங்களில், சாரல் காற்று வீசுகிறது. இதை தொடர்ந்து நாளை மறுநாள் (4ம்) தேதி முதல், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், மாநிலம் முழுவதும், அதிகபட்ச வெப்ப நிலையின் அளவும் குறைய துவங்கியுள்ளதால், கோடையில் 44 டிகிரி செல்சியசுக்கு மேல் அடித்த வெயில் திருத்தணியில், 41.5, வேலூரில், 40.7, கரூர் பரமத்தியில், 40.2 டிகிரி செல்சியசாக குறைந்தது. அதேபோல, சென்னை உட்பட மற்ற பகுதிகளிலும், வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், வால்பாறை, பேச்சிப்பாறை, மதுரையில் 3 செ.மீ., சின்னக்கல்லார் 2; கோத்தகிரி, மருங்காபுரி, கொடைக்கானலில், 1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.