
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கும், முன்னாள் நீதிபதியின் ஒரு நபர் ஆணைய விசாரணைக்கும் தடை விதித்தது.
கரூர் ஆவணங்கள் தீயில் எரிந்தன
இந்நிலையில், கரூரில் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகம் அருகே கரூர் ஆவணங்கள் தீயில் எரிந்து கிடப்பதும், பென் டிரைவ் ஒன்றும் கிடப்பதுமான புகைப்படங்கள் வெளியாயின. இதை வைத்து கரூர் சம்பவத்தில் திமுக யாரை காப்பாற்ற முயற்சிக்கிறது என்ற அடுக்கடுக்கான கேள்வியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நயினார் அடுக்கடுக்கான கேள்விகள்
இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியதோடு மனதில் பல கேள்விகளையும் எழுப்புகிறது.
1. விசாரணை முடியும் முன்னரே வழக்கு தொடர்பான காகிதங்களை அழிப்பதற்கு அனுமதி தந்தது யார்?
2. பென்டிரைவைக் கூட விசாரணை நடத்தப்பட்ட இடத்தில் வைத்தே எரிக்கும் அளவிற்கு அப்படி என்ன நிர்பந்தம் ஏற்பட்டது?
யாரை காப்பாற்ற முயற்சிக்கிறது?
3. அவசரகதியில் சிறப்புப் புலனாய்வுக் குழு நியமிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டி அதனை உச்ச நீதிமன்றம் தடைவிதித்த உடனேயே ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளது ஏன்?
4. உச்ச நீதிமன்றமோ அல்லது ஏதேனும் சட்டமோ ஆவணங்களை அழிக்க வேண்டும் என்று கூறுகிறதா?
5. விசாரணை முடியும் முன்னரே சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் முதல் அரசு அதிகாரிகள் வரை ஒருதலைபட்ச கருத்துகளை ஆர்வமாகத் தெரிவித்த நிலையில், தற்போது ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளது எதனை மறைக்க? யாரைக் காப்பாற்ற?
உண்மை உறங்காது
கரூர் துயரச் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்குத் திமுக அரசு முதலில் மறுத்தது, சட்டசபை வளாகத்தில் வைத்தே அமைச்சர்கள் அவசரகதியாக மாற்றி மாற்றி கருத்துகளைத் தெரிவித்தது, தற்போது ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளது என இவையனைத்தும் திமுக அரசு எதையோ மறைக்க முயற்சிப்பதையே சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், உண்மை என்றும் உறங்காது! தமிழக பாஜக உறங்கவும் விடாது.
திமுக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்
எனவே, வழக்கம் போல வாய்ப்பூட்டு அணிந்து திசைதிருப்பு நாடகங்களில் ஈடுபடாமல் ஆவணங்கள் எரிக்கப்பட்டது தொடர்பாக உடனடியாக திமுக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.