கருணாநிதியின் அரசாணை 354க்கு உயிர் கொடுங்க..திமுக சொன்னது என்ன ஆச்சு? முதல்வருக்கு பறந்த அதிரடி லெட்டர்

By Raghupati RFirst Published May 31, 2023, 7:41 AM IST
Highlights

தமிழகத்தில் கருணாநிதியின் பெயர் பேசப்படும் வகையில் அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டு வருகிறார். ஆனால் அரசாணை 354-ஐ மட்டும் நடைமுறைப்படுத்தாமல் மறுத்து வருவதுதான் வேதனையாக உள்ளது என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு கூறியுள்ளது.

அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி முதல் ஓராண்டு காலம் சிறப்பாக நடத்த உள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.

இந்த மருத்துவமனையை திறந்து வைக்கவும், நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வருமாறும், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு தமிழக முதல்வர் டெல்லிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்ததை ஏற்றுக்கொண்டு வருகை தர உள்ளார். திமுக ஆட்சி அமைந்தது முதல் கருணாநிதி காட்டிய வழியில் ஆட்சி நடக்கிறது என்பதை முதல்வர் தொடர்ந்து பெருமையாக தெரிவித்து வருகிறார். மேலும் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் முதல்வர் படத்துடன் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படமும் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கருணாநிதியைப் பெருமைப்படுத்தும் வகையில், கிழக்கு கடற்கரை சாலைக்கும், சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கேலரிக்கும் அவரது பெயர், அவரின் கடிதங்களை தொகுத்து நூல்களாக வெளியிடுதல், அவரின் பேனாவுக்கு சிலை வைத்தல், கிண்டி பல்நோக்கு மருத்துவமனைக்கு அவரது பெயர், மதுரையில் அவரது பெயரில் நூலகம் என தொடர்ந்து தமிழகத்தில் கருணாநிதியின் பெயர் பேசப்படும் வகையில் அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டு வருகிறார்.

இருப்பினும் 2009ம் ஆண்டு கருணாநிதியின் ஆட்சியில் அரசு மருத்துவர்கள் நலன் மற்றும் சுகாதாரத் துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட அரசாணை 354-ஐ மட்டும் நடைமுறைப்படுத்தாமல் மறுத்து வருவதுதான் வேதனையாக உள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக அரசு மருத்துவர்களுக்கு DACP எனப்படும் காலம் சார்ந்த ஊதியம் மற்றும் பதவி உயர்வு கிடைத்திடும் வகையில், அரசாணை 354-ஐ கருணாநிதி வெளியிட்டார். இருப்பினும் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், என்ன காரணத்திற்காக கருணாநிதி வெளியிட்டாரோ, அதற்கான பலன்கள் மருத்துவர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை.

இதையும் படிங்க..பிளஸ் 2 விடைத்தாள் நகல் பதிவிறக்கம், மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு எப்போது தெரியுமா? முழு விபரம்

அரசு மருத்துவர்களின் ஊதியத்தை மட்டும் மனதில் வைத்து, ஊதிய உயர்வுக்கான அரசாணையை அன்று கருணாநிதி வெளியிடவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி வரையிலான சுகாதாரத் துறையை வலுப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தான் வெளியிடப்பட்டது. பெரும்பாலான மக்கள் பெரிதும் நம்பியிருப்பது அரசு மருத்துவமனைகள்தான் என்ற நிலையில், இந்த சமூகத்தை உயிரோட்டமாக வைத்திருக்க, தங்கள் பங்களிப்பை தரும் அரசு மருத்துவர்களுக்கு, உரிய ஊதியத்தை தருவதன் மூலம், இன்னும் உற்சாகமாக பணியாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் தான் அன்று அரசாணையை வெளியிட்டார்.

ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற அரசு மருத்துவர்கள் நீண்டகாலமாக போராடி வருகிறோம். குறிப்பாக 2019-ம் ஆண்டு போராட்டத்தின் போது 118 அரசு மருத்துவர்கள் (40 பெண் மருத்துவர்கள்) 500 கி. மீட்டருக்கு அப்பால் இடம் மாற்றம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஊதியக் கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரையே கொடுத்தார்.

மேலும் அன்று மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் மன உளைச்சலால் உயிரிழந்தபோது, உடனடியாக இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்த அன்றைய எதிர்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின், அதிமுக அரசை மருத்துவ சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது என தெரிவித்ததை நினைவுப்படுத்த விரும்புகிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

click me!