கருணாநிதி மறைவு…தமிழகத்தின் பல பகுதிகளில் பேருந்து கண்ணாடிகள் உடைப்பு… மரங்கள் வெட்டி சாய்ப்பு…தீ வைப்பு…

First Published Aug 7, 2018, 11:22 PM IST
Highlights

திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கித் தர முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தால் ஆத்திரமடைந்த திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்து கண்ணாடிகளை உடைத்தும் மரங்களை வெட்டி  சாய்த்தும், தீ வைத்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  

திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கித் தர முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தால் ஆத்திரமடைந்த திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்து கண்ணாடிகளை உடைத்தும் மரங்களை வெட்டி  சாய்த்தும், தீ வைத்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  

உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி, இன்று மாலை 6.10 மணிக்கு மரணமடைந்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மறைந்த கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு, மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் இடம் ஒதுக்கித் தர வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாலும், சட்ட சிக்கல்கள் இருப்பதாலும் மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என்றும் காந்தி மண்டபம் அல்லது காமராஜர் மண்டபம் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கித் தரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது திமுக தொண்டர்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்டபல இடங்களில் தொண்டர்கள் வேண்டும்… வேண்டும்.. மெரினாவில் இடம் வேண்டும் என முழக்கமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில்  கிருஷ்ணகிரியை அடுத்த வேப்பனஹள்ளி  சுற்று வட்டார பகுதிகளில் பல இடங்களில் சாலை ஓர மரங்கள் வெட்டி சாய்த்து சாலைகளில் போட்டு போக்குவரத்தை தடுத்து வருகின்றனர். மேலும் சாலைகளில் டயர்களையும், கொளுத்தி போட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பல பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. ஒரு சிலர் காயமடைந்தனர். இதே போன்று தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் அரசு பேருந்து கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. இதில் பெண் ஒருவர் காணமடைந்தார். தொடர்ந்து பல இடங்களில் இது போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

click me!