கருணாநிதி சீரியஸ் எதிரொலி…படிப்படியாக குறைக்கப்படுகிறது அரசுப் பேருந்து சேவை!!

First Published Aug 7, 2018, 6:07 PM IST
Highlights

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து சேவையை படிப்படியாக குறைக்க, போக்குவரத்துத்கழகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து சேவையை படிப்படியாக குறைக்க, போக்குவரத்துத்கழகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. 

காய்ச்சல் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்பட்ட தொற்று காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வாரம் அவருக்கு திடீரென ஏற்பட்ட பின்னடைவால் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் டாக்டர்கள் அளித்த சிகிச்சை காரணமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் மீண்டும் அவர் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. முதுமை காரணமாக அவரது உடல் மருத்துவ சிகிச்சைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் 24 மணி நேரம் பார்த்த பிறகே எதுவும் உறுதியாக சொல்ல முடியும் என காவேரி மருத்துவமனை நேற்று அறிவித்தது.

இந்நிலையில் இன்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலை மேலும் மோசமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து சேவையை படிப்படியாக குறைக்க, போக்குவரத்துத்கழகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல இடங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகளும் ஒரு சில இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சில இடங்களில் பயணிகள் பேருந்துகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
 

click me!