
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் போது, ரூ.32 லட்சம் இருந்த்து. அதில், வழக்கத்தைவிட பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ரூ.10 லட்சம் வரை அதிகம் இருந்தன.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். நேற்று காலை கோவில் இணை ஆணையர் டி.காவேரி மேற்பார்வையில் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணப்பட்டன. இதில் ரூ.32 லட்சம் கோவிலுக்கு வருமானமாக கிடைத்து உள்ளது.
இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், கபாலீஸ்சுவரர் கோவிலில் உள்ள 17 உண்டியல்கள் காலை 10.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 6.30 மணி வரை எண்ணப்பட்டன. அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில், அறநிலையத்துறை ஊழியர்கள் மற்றும் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபடும் தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர். உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.32 லட்சம் இருந்தது.
இதுதவிர நேர்ச்சை பொருட்களும் இருந்தன. 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, வழக்கத்தைவிட தற்போது உண்டியல்களில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக இருந்தன. குறிப்பாக ரூ.500 நோட்டுகள் அதிகம் இருந்தது. இந்தப்பணம் முழுவதும் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி திறக்கப்பட்டதில் ரூ.22 லட்சம் வருமானம் கிடைத்தது. கடந்த மாதத்தை விட தற்போது ரூ.10 லட்சம் கூடுதலாக கிடைத்துள்ளது என்றனர்.