
காஞ்சிபுரம்
நந்திவரம் – கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள வார்டுகளில் முதலமைச்சர் நியமித்த காஞ்சீபுரம் மாவட்ட டெங்கு ஒழிப்பு அதிகாரியான அமுதா ஆய்வு நடத்தி தூய்மையின் அவசியத்தை மக்களிடம் வலியுறுத்தினார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெங்கு ஒழிப்புப் பணிகளை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்துள்ளார்.
அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு அதிகாரி அமுதா நேற்று காலை நந்திவரம் – கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள 15–வது வார்டு, மற்றும் 16–வது வார்டு பகுதியில் வீடு, வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வீட்டின் பின்புறம் மற்றும் முன்பகுதியை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று மக்களிடம் வலியுறுத்தினார். மேலும், கழிவுநீர் கால்வாய்களில் பிளீச்சிங் பொடி தெளிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது அவருடன் காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, செங்கல்பட்டு மண்டல நகராட்சி இயக்குனர் மருத்துவர் இளங்கோவன், காஞ்சீபுரம் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பொறுப்பு) மனோகரன், நந்திவரம் – கூடுவாஞ்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி, உள்பட பலர் உடனிருந்தனர்