
சென்னை: என் இனிய நண்பர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்று நடிகரும், மக்கள் நீதிமய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பிரபலமான காவேரி மருத்துவமனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலம் இன்றி அட்மிட் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. ஆனாலும் அவரது உடல்நிலையில் என்ன பிரச்னை என்பது பற்றிய பல்வேறு தகவல்களினால் ரசிகர்கள் குழம்பி தவித்தனர்.
ஆனால் வழக்கமான தமது மருத்துவ பரிசோதனைக்காக தான் ரஜினிகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். நலமாக இருக்கிறார்,விரைவில் வீடு திரும்புவார் என்று விளக்கம் அளித்தார்.
அதே நேரத்தில் ரஜினிகாந்த் உறவினரான ஒய்ஜி மகேந்திரன் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
ரஜினிகாந்த் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். வழக்கமான பரிசோதனைகளுக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அண்ணாத்த படம் ரிலீஸ் தேதிக்கு முன்பாக அவர் வீடு திரும்பி விடுவார் என்று கூறினார்.
இதையடுத்து ரஜினிகாந்த் அட்மிட் செய்யப்பட்டு உள்ள மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டதாவது:
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை நன்றாக இருக்கிறது. அவரது உடலில் ரத்த ஓட்டத்தை சீரமைக்கும் வகையில் அதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
இன்னும் ஓரிரு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிடுவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்த அரசியல் பிரபலங்கள், திரையுலகத்தினர் உள்ளிட்ட பலரும் அவர் நன்கு உடல்நலம் தேறி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந் நிலையில் நடிகர் கமல்ஹாசன் தமது நண்பர் ரஜினிகாந்த் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுகிறேன் என்று தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் ஒரு டுவிட்டர் பதிவையும் வெளியிட்டு உள்ளார்.
அந்த பதிவில் கமல்ஹாசன் கூறி இருப்பதாவது: மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் @rajinikanth விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன் என்று பதிவிட்டு உள்ளார். திரையுலகில் பல்வேறு தரப்பினரும் நடிகர் ரஜினிகாந்த் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.