
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மம் மரணம் விவகாரம் தொடர்பான கலவரத்தின் போது பள்ளிகளுக்குள் புகுந்து பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் அதனை பள்ளிக்கு அருகே வைத்துச் செல்ல வேண்டும் என தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் நடந்த 17-ம் தேதி இந்ததத போராட்டம் வன்முறையாக வெடித்தது.
இதையும் படிங்க;- பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !
அப்போது, பள்ளியின் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பள்ளியின் உடைமைகளும் எரித்து நாசமாக்கப்பட்டன. பள்ளியில் இருந்த நாற்காலி, மேஜை, பெஞ்சுகள், ஏர் கூலர் உள்ளிட்ட பல பொருட்களை வன்முறையாளர்கள் தூக்கிச் சென்றனர். இரு சக்கர வாகனங்களிலும், தலையிலும் அவர்கள் பொருட்களை அள்ளி சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுவரை கலவரத்தில் ஈடுபட்டவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வாட்ஸ் அப் குழுவில் இருந்து பெறப்பட்ட 600 எண்களை வைத்து அவர்களில் யார் யார் கலவரம் நடந்த இடத்தில் இருந்தனர் என அடையாளம் கண்டு அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க;- 72 மாணவர்களை ஈவு இரக்கம் இல்லாமல் பிரம்பால் தாக்கிய ஆசிரியர்.. பணியிடை நீக்கம் !
இந்நிலையில், கலவரத்தின் போது பொருட்களை தூக்கிச் சென்றவர்கள் திரும்பவும் பள்ளிக்கு எடுத்து வந்து ஒப்படைக்க வேண்டும். மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனியாமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.