
காரைக்குடி:
தைப்பூசம் திருவிழாவை ஒட்டி நடைப்பெற்ற மஞ்சுவிரட்டில் கலந்து கொண்ட காளையர்களை, காளைகள் தூக்கி வீசி ஒரு கை பார்த்தன.
தமிழர்களின் திருவிழா என்று பொங்கலுக்குப் பிறகு சொல்லப்பட்டும் மற்றுமொரு திருவிழா தைப்பூசம். இது உலகம் முழுவதும் தமிழர்களால் மட்டுமல்ல மற்ற நாட்டவராலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் தை பூசத்தை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.
இதில் நேமம், குன்றக்குடி, கோவிலூர், காரைக்குடி, திருப்புத்தூர், சிங்கம்புணரி, நெடுமரம், பலவான்குடி, வலையபட்டி உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
முன்னதாக கோயில் காளைக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில்
மரியாதை செய்யப்பட்டு தொழுவில் அவிழ்த்து விடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தொழு வழியாக 50-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இவை சின்னக் குன்றக்குடி கண்மாய் மற்றும் வயல் வெளிகளில் அவிழ்த்து விடப்பட்டன.
ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். சில காளையர்களை, காளைகள் தூக்கி வீசின. எதிர்பட்ட அனைவரும் தவுடு பொடியாக்கி ஒரு கை பார்த்தன.
இந்த மஞ்சுவிரட்டுக்கு பாதுகாப்பு அளித்து, குன்றக்குடி காவலாளர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்..