கஜா புயல் வேதாரண்யத்தில் இருந்து 125 கிலோ மீட்டர் நெருங்கி வந்துள்ள நிலையில், அதன் வெளிப்பாகம் தற்போது கடற்கரையைத் தொட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான கஜா புயலானது நாகை கடற்கரையில் இருந்து இருந்து 125 கி.மீ. தொலைவில் உள்ளது. கஜா புயல் கரையை கடக்கும்போது 80 கி.மீ முதல் 90 கி.மீ வரை காற்று வீசும். சில நேரத்தில் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் குறித்து ஒவ்வொரு நிமிடமும் வானிலை ஆய்வு மையம் அப்டேட் கொடுத்துக் கொண்டே இருக்கிறது . தற்போது கஜா புயல் மணிக்கு 16.8 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி வந்து கொண்டு இருந்த நிலையில் அதன் வேகம் 10 கி.மீட்டராக குறைந்துள்ளது.
இந்த நிலையில், கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. பயங்கர சூறாவளிக் காற்று வீசி வருகிறது.
இந்நிலையில், நாகையின் வேதாரண்யம் பகுதியில் உள்ள 10 முகாம்களில் 10 கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதேபோன்று திருத்துறைப்பூண்டியில் 2,207 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேதாரண்யத்தில் உள்ள முகாமிலேயே தங்கி கண்காணித்து வருகிறார்.
கடலூரின் கடலோர பகுதிகளில் குடிசைகளில் வசிக்கும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 750 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
பொதுமக்கள் மழையின்பொழுது, ஈரம் நிறைந்த சுவர், மரம் ஆகியவற்றின் அருகே ஒதுங்க வேண்டாம். இரவு 8 மணிக்கு மேல் வெளியே செல்லாமல் தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் அன்பு செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து மீட்பு பணி மேற்கொள்வதற்காக இந்திய கடலோர காவல் படையின் 4 கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.