உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி அலமேலு நடராஜன், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார். வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட உடுமலை சங்கரை உடுமலை பேருந்து நிலையத்தில் ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை உட்பட 9 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. இதை விசாரித்த நீதிபதி அலமேலு நடராஜன், கடந்த டிசம்பர் 12ந்தேதி இறுதி தீர்ப்பு வழங்கினார். அதில், முதல் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, கூலிப்படையை சேர்ந்த ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல் ஆகிய 6 பேருக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
ஆணவ கொலை வழக்கில், நாட்டையே திரும்பிப் பார்க்கும் வைக்கும் வகையில் நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பு வழங்கினார். இனிமேல் ஆணவ கொலை செய்ய யோசிக்கும் அளவுக்கான தீர்ப்பை வழங்கிய நீதிபதி அலமேலு நடராஜன் இன்று உயிரிழந்தார்.
கோவையில் இருந்த நீதிபதி அலமேலுவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். ஆனால் அவருக்கு அளித்து வந்த சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளார்.