தஞ்சாவூர் மேலவீதியில் கழிவுநீர் கால்வாய் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஜெயலலிதா கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மேலவீதியில் கழிவுநீர் கால்வாய் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஜெயலலிதா கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளின் ஒரு பகுதியாக சாலை மேம்பாட்டுப் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, தஞ்சாவூரில் உள்ள தேரோடும் வீதிகளில் சாலைகளை சீரமைத்து, மழைநீர் வடிகால்கள் கட்டி, அவற்றின் மீது நடைபாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மேல வீதியில் கொங்கனேஸ்வரர் கோயில் அருகில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப்படம் வைத்து கோயில் கட்டப்பட்டிருந்தது. இந்தக் கோயில் கழிவுநீர் கால்வாய் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து, அந்தக் கோயிலை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர். இந்தக் கோயிலை முன்னாள் கவுன்சிலரும் கோட்டை பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளருமான சுவாமிநாதன் 2017-ம் ஆண்டு கட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல கோவிலுக்கு வெளியே ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகளும் வைக்கப்பட்டிருந்தது.
இதுக்குறித்து மாநகராட்சி தரப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்ட அடிப்படையில் மாநகராட்சியில் பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சாலைகளை சீரமைத்து மழைநீர் வடிகால் அமைக்க, சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. எனவே மேல வீதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த இந்த கோவில் இடிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்குள் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவபடமும் எவ்வித சேதமின்றி உரியவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை இடிப்பதற்கு முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு, கால அவகாசம் கொடுக்கப்பட்டது என்றும் தஞ்சை மாநகராட்சி தரப்பில் விளக்கம் கொடுத்துள்ளது.