ஜெயலலிதாவுக்கு கூட கிடைக்காத சரித்திர பெயர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைச்சிருக்கு; இதை வாசிங்க தெரியும்…

Asianet News Tamil  
Published : May 29, 2017, 08:33 AM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
ஜெயலலிதாவுக்கு கூட கிடைக்காத சரித்திர பெயர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைச்சிருக்கு; இதை வாசிங்க தெரியும்…

சுருக்கம்

Jayalalithaa does not get the historical name but Edappadi Palanisamy got

சேலம்

மேட்டூர் அணை கட்டிமுடிக்கப்பட்டு 83 ஆண்டுகள் ஆகிய நிலையில் முதல்முறையாக தூர்வாரப்படுகிறது. இந்த தூர்வாரும் பணியைத் துவக்கி வைத்ததால் சரித்திரத்தில் இடம் பெறுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயலலிதாவுக்கு கூட இந்த பெருமை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் வறண்டு கிடக்கும் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை தூர்வாரி அவற்றின் கொள்ளளவை அதிகப்படுத்தும் குடிமராமத்து திட்டத்தை தமிழக அரசு தொடங்கி இருக்கிறது.

காஞ்சீபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் தாலுகா மணிமங்கலம் ஏரியில் குடிமராமத்து திட்டப் பணிகளை கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி முதலமைச்சர் இடைப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள, தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய அணையான மேட்டூர் அணையை தூர்வாரும் பணி நேற்றுத் தொடங்கியது.

1934-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மேட்டூர் அணையில் 120 அடி உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கி வைக்கலாம்.

சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக இந்த அணைதான் இருக்கிறது.

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 83 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை தூர்வாரப்படவில்லை. அணையில் வண்டல் மண் தேங்கியதால், கொள்ளளவும் குறைந்துள்ள நிலையில் மேட்டூர் அணை முதல் முறையாக தூர்வாரப்படுகிறது.

மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். தூர்வாரப்படும் இடத்தின் அருகில் நெருப்பு வளர்த்து பூஜை நடத்தப்பட்டது.

தூர்வாரப்படும் இடத்தில் 100-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், 20-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் தயாராக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. தூர்வாரப்பட்ட வண்டல் மண்ணை ஒரு சட்டியில் எடுத்து, அதை ஒரு பெண் விவசாயியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி, தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், மருத்துவர் வி.சரோஜா, எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், காமராஜ், எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாசலம், மனோன்மணி, வெற்றிவேல், சக்திவேல், சின்னதம்பி, மருதமுத்து, ராஜா, பொதுத்துறை முதன்மைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் மற்றும் உயர் அதிகாரிகள், விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியின் வலதுகரை பகுதியில் அமைந்துள்ள மூலக்காடு, அச்சங்காடு, கொளத்தூர் மற்றும் பண்ணவாடி கிராமங்களிலும், நீர்த்தேக்க பகுதியின் இடதுகரை பகுதியில் அமைந்துள்ள கூணான்டியூர் மற்றும் கோனூர் (மேற்கு) ஆகிய கிராமங்களிலும் தூர்வாரும்போது எடுக்கப்படும் வண்டல் மண்ணில் முதற்கட்டமாக ஒரு இலட்சம் கனமீட்டர் வண்டல் மண்ணை விவசாயிகள் கட்டணமின்றி எடுக்க தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“மேட்டூர் அணை கட்டுமான பணி, 1925-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1934-ஆம் ஆண்டு நிறைவுப் பெற்றது. இந்தக் காலகட்டத்தில், அணை கட்டுவதற்காக ரூ.4 கோடியே 80 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது.

தற்போது மேட்டூர் அணையில் 120 அடி தண்ணீர் தேக்க முடியும். அணையின் கொள்ளளவு 93.470 டி.எம்.சி. ஆகும். காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதி கர்நாடகம், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் 14 ஆயிரத்து 300 சதுர மைல் ஆகும். அணையின் நீர்பரப்பு பகுதி 59.25 சதுர மைல். அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்போது, அணை மற்றும் சுரங்க மின்நிலையங்கள் மூலம் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

மேட்டூர் அணை மூலம் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் சுமார் 16.05 இலட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

மேட்டூர் அணை கட்டிமுடிக்கப்பட்டு 83 ஆண்டுகளில், 38 ஆண்டுகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேட்டூர் மேற்குக்கரை கால்வாய் மைல் சரகம் 7 ஆயிரத்து 283 மீட்டர் முதல் 13 ஆயிரத்து 920 மீட்டர் வரை மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாரபுரி வட்டம், மேட்டூர் கிழக்குக்கரை கால்வாய் கீழ் சரகம் 45 ஆயிரத்து 300 மீட்டர் முதல் 58 ஆயிரம் மீட்டர் வரை கால்வாய் புனரமைக்கும் பணிகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டத்தில் சரபங்கா நதிக்கரையை பலப்படுத்தும் மூன்று ஏரிகள் மற்றும் நான்கு அணைக்கட்டுகள் புனரமைக்கும் பணிகள் ரூ.7 கோடியே 81 இலட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.

அணைகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ், மேட்டூர் அணையை புனரமைத்து மேம்பாடு செய்யும் பணி ரூ.10 கோடியே 72 இலட்சம் மதிப்பில் முன்னேற்றத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு, பருவ மழையின் போது கிடைக்கும் தண்ணீர் முழுவதும் சேமித்து வைக்கப்படும்” என்று அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

அதிமுகவிடம் பாஜககூட ஆட்சியில் பங்கு கேட்கலாம்... திமுகவுக்காக காங்கிரஸ் என்ன செய்தது..? நியாயம் சொல்லும் தராசு ஷ்யாம்..!
மோடி, அமித்ஷா பருப்பு தமிழ்நாட்டில் வேகாது..! உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு