கல்லாலங்குடியில் நடைபெற்ற ஏறுதழுவல் போட்டி; விரட்டி விரட்டி காளைகள் முட்டியதில் 10 பேருக்கு காயம்...

First Published Apr 30, 2018, 8:51 AM IST
Highlights
jallikattu Competitive in Kallalangudi 10 people injured by bulls hits


புதுக்கோட்டை 

புதுக்கோட்டையில் உள்ள கல்லாலங்குடியில் நடைபெற்ற ஏறு தழுவல் போட்டியில் களமிறங்கிய காளைகள் முட்டி தூக்கியதில் 10 பேர் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஏறு தழுவல் போட்டி நடைப்பெற்றது. 

இந்தப் போட்டிக்கு மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் தலைமைத் தாங்கினார். இதனை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். 

இதில், புதுகை, திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 823 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 

வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 225 வீரர்கள் களமிறங்கி அடக்க முயன்றனர். அப்போது, காளைகள் முட்டியதில் ஆறு மாடுபிடி வீரர்கள், நான்கு பார்வையாளர்கள் என மொத்தம் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.

அவர்களுக்கு ஏறு தழுவல் போட்டிக்காக தயாராக வைக்கப்பட்டிருந்த மருத்துவர் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இவர்களில் பலத்த காயமடைந்த நான்கு பேருக்கு புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 

இந்தப் போட்டிக்கான பாதுகாப்பு பணிகளை ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அப்துல் முத்தலீப் தலைமையிலான காவலாளர்கள் மேற்கொண்டனர்.
 

click me!