108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அதிநவீன செல்போன்; நோயாளிகளின் இருப்பிடங்களை துல்லியமாக அறிய உதவுமாம்...

First Published Apr 30, 2018, 8:42 AM IST
Highlights
latest cellphone for 108 Ambulance drivers to Help patients


பெரம்பலூர்

நோயாளிகளின் இருப்பிடங்களை ஜி.பி.எஸ். மூலம் துல்லியமாகக் கண்டறிய உதவும் செயலியுடன் கூடிய ஆன்ட்ராய்டு செல்போன்கள் 108 அவசர ஊர்தி வாகன ஓட்டுநர்களுக்கு பெரம்பலூர் ஆட்சியர் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் 108 அவசர ஊர்தி வாகன ஓட்டுநர்களுக்கு ஜி.பி.எஸ். மூலம் துல்லியமாகக் நோயாளிகளின் இருப்பிடங்களை கண்டறிய உதவும் செயலியுடன் கூடிய ஆன்ட்ராய்டு செல்போன்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் செல்போன் சாதனத்தை வழங்கி மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா பேசியது:

"108 அவசர ஊர்தியை அழைக்கும் மக்கள், எந்தப் பகுதியில் இருந்து அழைக்கிறார்கள், இருப்பிட விவரம் ஆகியவை 108 வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து சம்பந்தப்பட்ட பகுதியில் இயங்கும் 108 அவசர ஊர்தி ஓட்டுநரின் அலைபேசிக்கு குறுந்தகவலாக வந்துவிடும்.

அழைத்த நபர் ஊர்தி வருவதற்குள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் பயணித்தாலும், அவரது இருப்பிடம் குறித்த தகவல் உடனுக்குடன் அவசர ஊர்தி ஓட்டுநருக்கு குறுந்தகவலாகச் சென்றுவிடும். இந்த வசதியானது, அழைத்த நபரை உரிய காலத்துக்குள் காப்பாற்ற பெரும் உதவியாக இருக்கும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் இரண்டு அவசர ஊர்திகளும், வருவாய்க் கோட்டாட்சியரகத்தில் ஒரு ஊர்தியும், அம்மாபாளையம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு ஊர்தியும், வேப்பந்தட்டை, வாலிகண்டபுரம், லப்பைகுடிகாடு, வேப்பூர், குன்னம் உள்ளிட்ட பகுதிகளில் 108 அவசர ஊர்திகள் இயக்கப்படுகின்றன.

கடந்தாண்டு இறுதியில் சிறுவாச்சூர் பகுதிக்கு தமிழக அரசால் 108 அவசர ஊர்தி வழங்கப்பட்டிருந்த நிலையில், கை.களத்தூர் பகுதிக்கு தனி அவசர ஊர்தி வழங்கப்பட்டது. 

தற்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் 108 அவசர ஊர்திகள் இயக்கப்படுகின்றன" என்று அவர் பேசினார். 

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கொள்ளைநோய் தடுப்பு அலுவலர் அரவிந்தன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

click me!