
காவல் ஆய்வாளர் வீட்டில் நடந்த திருட்டுச் சம்பவம் புதுக்கோட்டை நகர காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவிர, பொதுமக்களும் தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் அருகே உள்ளது கட்டியாவயல் கிராமம். இங்கு வசிப்பவர் சுப்பையார். இவர் காவல் ஆய்வாளராக, அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுர் என்ற ஊரில் உள்ள போலீஸ் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கட்டியாவயல் கிராமத்துக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சென்று வருவார். வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகள் மட்டுமே இருந்து வந்தனர். வீட்டில் பாப்பு என்ற பெயர் கொண்ட நாய் பாதுகாப்புக்காக வளர்ந்து வந்தனர்.
இந்த நிலையல், கோயில் திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக, சுப்பையாவின் மனைவி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளும் கடந்த வெள்ளி அன்று மாலை வீட்டைப் பூட்டி விட்டு சென்றுள்ளனர். வீட்டில் நாள் மட்டுமே இருந்துள்ளது.
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த திருடர்கள், எலியை சாகடிக்கப் பயன்படுத்தப்படும் பிஸ்கெட்டை கொடுத்து கொன்றுள்ளனர். மேலும், வீட்டுக்குள் நுழைந்து ஒரு இடம் பாக்கியில்லாமல் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு தப்பியோடி உள்ளனர்.
இந்த நிலையில் கோயில் திருவிழா முடிந்து இரவு சுமார் 7 மணிக்கு வீட்டுக்கு வந்த சுப்பையாவின் மனைவி, நாய் இறந்து கிடப்பதையும், வீடு திறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. பீரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. இதனை அடுத்து, தனது கணவருக்கு தகவல் கூறியிருக்கிறார். சுப்பையா, திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி சொல்லியிருக்கிறார்.
வீட்டில் செலவுக்காக வைத்திருந்த முப்பதாயிரம் ரூபாய், மூன்று பவுன் செயின், வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகீறது. இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.