
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜ சாகர் போன்ற முக்கிய அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கிருக்கும் அணைகளில் இருந்து காவரி ஆற்றின் நீர் திறப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு10,232 கன அடியில் இருந்து 12,444 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் தற்போதைய நீர் மட்டம் 64.90 அடியாக உள்ளது, நீர் இருப்பு 28.47 டி.எம்.சியாக உள்ளது.
குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு தற்போது 10,000 கன அடியில் இருந்து, 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 22.80 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கு தற்போது வினாடிக்கு 48,025 கன அடி வரும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 20,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையின் நீர்மட்டம் 61.51 கன அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 17.34 டி.எம்.சி.யாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 25,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் வினாடிக்கு 2,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பால், நீர்வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
220 ஆண்டுகளாக பூட்டப்படாத வீடு.. தஞ்சையின் மற்றொரு வரலாற்று பொக்கிஷம்!