
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். மேலும் மக்களுக்காக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகை ரூ.5,000லிருந்து ரூ.6000ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 15 தொடங்கி ஜூன் 15 வரையும் கன்னியாகுமரி மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரையும் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 61 நாட்களும் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க முடியாது. இதுபோன்ற எந்த தொழிலுக்கும் குறிப்பிட்ட நாட்களுக்கு தடை விதிப்பதில்லை. இந்த தடைகாலத்தில் மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது. தற்போது மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகையாகத் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கிடையே திமுக தனது தேர்தல் அறிக்கையில், மீன்பிடி தடைகால நிவாரணத்தை ரூ.8 ஆயிரமாகவும், மழைக்கால நிவாரணத்தை ரூ. 6 ஆயிரமாகவும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. எனவே, தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணம் உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக மீனவர் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தது. அதுமட்டுமின்றி தற்போது நம் தமிழகத்தில் மழை காலம் என்பதால் பெரும்பாலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் தற்போது முதலமைச்சர் மு.ஸ்டாலின் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை அதிகரித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி மீன்பிடி தடைக்கால நிவாரண 6 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுத்தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை வெளியிட்டு உள்ளார். தேர்தல் வாக்குறுதிப்படி நடப்பாண்டு முதல் குடும்பம் ஒன்றுக்கு 6,000 ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதனால் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.80 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு 108 கோடி நிவாரண தொகை தரப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் மீன்பிடி தடை காலத்தில் கடலுக்கு செல்ல முடியாத மீனவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிவாரண தொகையை மீனவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.