எட்டாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, ரோஜாப்பூ கொடுத்து காதலை வெளிப்படுத்திய ஆசிரியர் ஒருவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த மற்ற இரண்டு ஆசிரியர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
பள்ளி சிறுவர் சிறுமியர்களிடம் ஆசிரியர்களோ, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களோ பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் வெளிவந்த வண்ணமே உள்ளது சென்னை, போரூரைச் சேர்ந்த சிறுமி ஹாசியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து எரித்த சம்பவம் தொடர்பாக ஐடி பொறியாளர் தஷ்வந்துக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
உத்தரபிரதேசத்தில், மாணவிக்கு சீருடை அளவெடுப்பதாக கூறி, நிர்வாணப்படுத்திய ஆசிரியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட்டாலும், இது தொடர்ந்த வண்ணமே உள்ளது.‘
இதுபோன்ற ஒரு சம்பவம் விழுப்புரத்தில் கடந்த 14 ஆம் தேதி நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், சின்னசேலத்தை அடுத்துள்ள மேல்நாரியப்பனூரில் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு, ஆசிரியர் ஒருவர் ரோஜாப்பூ கொடுத்து காதலைக் கூறியுள்ளார்.
ஆசிரியர் நிர்மல் என்பவர்தான், மாணவியிடம் இந்த தகாத செயலில் ஈடுபட்டுள்ளார். இதற்கு 2 ஆசிரியர்கள் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி அன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம், சம்பந்தப்பட்ட மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளார்.
அப்போது, ஆசிரியர் நிர்மல், அந்த மாணவியிடம் வந்து ரோஜாப்பூவைக் கொடுத்து காதலைக் கூறியுள்ளார். இதனை அந்த மாணவி ஏற்க மறுத்துள்ளார். நிர்மலுடன் வந்த மற்ற இரண்டு ஆசிரியர்கள், மாணவியை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் உள்ளனர். இதன் பிறகு வீட்டுக்குச் சென்ற மாணவி, இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர், உறவினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் நிர்மலை தாக்கியுள்ளனர். மேலும், ஆசிரியர் நிர்மல் மீது போலீசில் புகாரும் தெரிவித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் ஆசிரியர் நிர்மல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு ஆசிரியர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.