விவசாயத்தை பொறுத்தவரை மத்திய, மாநில அரசுகள் சரியில்லைங்க - சொன்னவர் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர்...

First Published Apr 10, 2018, 9:00 AM IST
Highlights
in agriculture central and state governments are not right - said the leader of the farmer labor party ...


திண்டுக்கல்

விவசாயத்தை பொறுத்தவரையில் மத்திய, மாநில அரசுகள் சரியில்லை என்றும் விவசாயிகள் ஒன்றுபட்டு போராடினால்தான் விவசாயத்தை காப்பாற்ற முடியும் என்றும் உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் கடந்த 1978-ஆம் ஆண்டு மின்சார கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது காவலாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இவர்களின் நினைவிடம் வேடசந்தூர் - திண்டுக்கல் சாலையில் உள்ளது.

இங்கு, உயிர் நீத்த உழவர் தியாகிகளின் 40-ஆம் ஆண்டு வீரவணக்க நாள், விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு துணைத்தலைவர் குணசேகர் தலைமை வகித்தார். செயலாளர் ராமசாமி, போராட்டக் குழுத் தலைவர் முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கருப்புச்சாமி வரவேற்றார். 

உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து, தமிழக விவசாயிகள் தொழிலாளர் சங்க நிறுவனர் திருப்பூர் மணி, வேடசந்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன், ம.தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் ராமசாமி, காங்கிரசு வட்டார தலைவர் சாமிநாதன் உள்பட பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து செய்தியாள்ர்களிடம், "உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. எனவே, மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். 

விவசாயிகளின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.

விளைப் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் கொடுக்க வேண்டும். 

கரும்பு விவசாயிகளுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 

நதிகளை இணைக்க வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 13-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டுக் குழுவின் சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும்.

விவசாயத்தை பொறுத்தவரையில் மத்திய, மாநில அரசுகள் சரியில்லை. விவசாயிகள் ஒன்றுபட்டு போராடினால்தான் விவசாயத்தை காப்பாற்ற முடியும்" என்று அவர் கூறினார்.
 

click me!