
தருமபுரி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தருமபுரியில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்ட தே.மு.தி.க. சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தருமபுரி தொலைபேசி நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தம்பிஜெய்சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் சௌந்தரராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் மணிமுனியப்பன், தனபால், கோபிநாத், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அன்புவிஜய் வரவேற்று பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தை கட்சியின் பொருளாளர் மருத்துவர் இளங்கோவன் பங்கேற்று தொடங்கி வைத்துப் பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கட்சி தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி எந்தவித தடையுமின்றி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்.
தமிழக மக்களின் ஜீவாதாரமாக விளக்கும் காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் தரவேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேல், கன்னியப்பன், ராமச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பெருமாள், பழனி, சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் விஜயசங்கர், ராமச்சந்திரன், உதயகுமார், சரவணன் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் முடிவில் தருமபுரி ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை நன்றி தெரிவித்தார்.