Ration Shops: மக்களே அலர்ட்..நாளை ரேஷன் கடை இயங்குமா..?அரசு முக்கிய அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published Feb 25, 2022, 6:47 PM IST
Highlights

தமிழகத்தில் ரேசன் கடைகளுக்காக அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை தினம் நாளை ரத்து செய்யப்பட்டு, வழக்கம் போல் கடைகள் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது
 

இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,நியாயவிலைக் கடைகள் வாயிலாகக் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்கள்வழங்கும்போது கைவிரல் ரேகை சரிபார்ப்பு முறை பின்பற்றப்படுகிறது.ஆதார் இணையத் தரவுத் தளம் வேலை செய்யவில்லை என்றும், இதனால் விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ள இயலவில்லை என்றும் இதனால் சில பகுதிகளில் நியாயவிலைக் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்கள் வழங்கப்படாமல் குடும்ப அட்டைதாரர்கள் திருப்பிவிடப்படும் நேர்வுகள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. 

கடந்த 22.02.2022 முதல் விரல்ரேகை சரிபார்க்கும் நடைமுறையில் இடையூறுகள் நமது மாநிலத்தில் மட்டுமன்றிப் பரவலாக இதர மாநிலங்களிலும் நிகழ்ந்துள்ளன. இவை தொடர்புடைய நிறுவனங்களின் உயர் அலுவலர்களின் கவனத்திற்கு உடனுக்குடன் கொண்டு செல்லப்பட்டுச் சரி செய்யப் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

எனவே பரவலாக இணைய இணைப்பு / தொழில்நுட்பத் தடைகளால் கைரேகை சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்பட இயலாத காலங்களில் உடனடியாக கைரேகை சரிபார்ப்பின்றி இதர வழிமுறைகளில் உரிய பதிவுகளை மேற்கொண்டு உரிய கண்காணிப்புடன் தவறாது உணவு பொருட்களை
விநியோகம் செய்யப்பட வேண்டும்.

அனைவருக்குமான பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அத்தியாவசியப் பண்டங்கள் தரமாக விநியோகம் செய்யப்பட்டு உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திட வேண்டுமெனவும் நியாயவிலைக் கடைப்பணியாளர்கள் உட்பட அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 26.02.2022 அன்றைய நியாயவிலைக் கடைகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டுக் கடைகள் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அட்டைதாரர்கள் அவர்களது குடும்ப அட்டைக்கான இன்றியமையாப் பண்டங்களை நியாயவிலைக் கடைகளிலிருந்து எந்தவித சிரமமுமின்றிப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

காந்தி ஜெயந்தி நாளான கடந்த ஜனவரி 30 ஆம் தேதியன்று ரேஷன் கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்த பணி நாளுக்குப் பதிலாக பிப்ரவரி 26 ஆம் தேதி சனிக்கிழமையன்று ரேஷன்கடைகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளைய தினம் பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!