ஆபாசமான அசைவு, வசனங்கள் இருக்க கூடாது.. ஆடல்,பாடல் நிகழ்ச்சிகளுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி !

By Raghupati RFirst Published Jun 10, 2022, 11:55 AM IST
Highlights

High Court : பல்வேறு கிராமங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாலும், கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாகவும் தற்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு போலீசார் அனுமதி வழங்குவதில்லை.

ஆடல், பாடல் நிகழ்ச்சி

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராம கோவில்களில் தற்போது திருவிழாக்கள் நடந்து வருகின்றன. இந்த திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். பல்வேறு கிராமங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாலும், கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாகவும் தற்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு போலீசார் அனுமதி வழங்குவதில்லை.

இந்நிலையில், மதுரை தென்பழஞ்சியை சேர்ந்த தங்கமாயன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மதுரை தென்பழஞ்சி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு ஆஸ்டின்பட்டி காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதனால் குதிரை எடுப்பு திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

உயர்நீதிமன்றம் அனுமதி

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக தமிழக டிஜிபி 9. 4. 2019-ல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ‘ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்பதில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உரிய தகவல்களுடன் 15 நாட்களுக்கு முன்பு அனுமதி கேட்டு மனு அளிக்க வேண்டும். மனு அளித்த நாளிலிருந்து ஒரு வாரத்தில் முடிவு தெரிவிக்க வேண்டும்.

நிகழ்ச்சியில் ஆபாசமான அசைவுகள், வசனங்கள் இருக்க கூடாது. சாதி, மத, இன, மொழி அடிப்படையில் பிரச்சினையை உருவாக்கும் வகையில் பேசக்கூடாது. அவ்வாறு பேசினால் நிகழ்ச்சியை போலீசார் எந்த நேரமும் நிறுத்தலாம். இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு போலீஸார் அனுமதி வழங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி காவல் ஆய்வாளரிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். காவல் ஆய்வாளர் டிஜிபியின் சுற்றறிக்கை அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : "இனி ஜி ஸ்கொயர் முத்துசாமி தான்.. பழைய சேகர்பாபுவை காட்டுங்க பார்க்கலாம்" மார்தட்டும் அண்ணாமலை !

இதையும் படிங்க : DMK: திராவிட மாடல் போய்.. காட்டுமிராண்டி மாடல் ஆகிவிடும் - எச்சரிக்கும் டிடிவி தினகரன் !!

click me!