
காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை சுட்டுக்கொன்றது நான் இல்லை என ராஜஸ்தான் போலீஸ் விசாரனையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் கொள்ளையன் நாதுராம்.
சென்னை கொளத்தூர் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கநகை கொள்ளை தொடர்பாக குற்றவாளி நாதுராமை தேடி சென்னையை சேர்ந்த தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர்.
டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை நாதுராம் மற்றும் அவனின் கூட்டாளிகளை பிடிக்க முயன்றபோது மதுரவாயில் ஆய்வாளர் பெரியபாண்டியனை நாதுராம் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் பெரியபாண்டியனை சுட்டது உடன் சென்ற முனிசேகர் என்பது தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பெரியபாண்டியின் உடல் தமிழகம் கொண்டவரப்பட்டது.
இதுகுறித்து ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தப்பியோடிய குற்றவாளி நாதுராமை கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் போலீசார் தேடி வந்தனர்.
இதனிடையே கடந்த வாரம் நாதுராம் தனது பேஸ்புக் பக்கத்தில் கையில் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தான்.
இந்நிலையில், குஜராத்தில் பதுங்கியிருந்த நாதுராமை ராஜஸ்தான் மாநில தனிப்படை போலீசார் கடந்த 13 ஆம் தேதி அதிரடியாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதைதொடர்ந்து நாதுராமிடம் ராஜஸ்தான் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெரியபாண்டியனை தான் சுடவில்லை எனவும் துப்பாக்கி சத்தம் கேட்டதும் நண்பன் தீபாராம் உடன் தப்பி விட்டதாகவும் நாதுராம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.