
திருவள்ளூர்
ஊத்துக்கோட்டையில் பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த கன மழையால் பல இடங்களில் மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. மின்கம்பங்கள் சாய்ந்ததால் 13 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான போந்தவாக்கம், அனந்தேரி, பெருஞ்சேரி, கட்சூர், நந்திமங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் பலத்த சூறாவளிக் காற்று வீசத் தொடங்கியது.
பின்னர் அது கனமழையாக உருவெடுத்து அனைத்து இடங்களையும் ஒரு கைப் பார்த்தது.
இதனால், பல இடங்களில் மரங்கள், சூறாவளிக் காற்றுக்கு தூக்கி வீசப்பட்டன. மின்கம்பங்களும் விழுந்தன.
அதேபோன்று, ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, சுருட்டப்பள்ளி பகுதியில் உணவு விடுதி மேல் பெரிய மரங்கள் சாய்ந்தன.
இந்நிலையில் திங்கள்கிழமை மின்கம்பங்கள் சாய்ந்ததால் 13 கிரமாங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கிராமங்கள் இருளில் மூழ்கின. நேற்று மின்வாரிய துறையினர் விழுந்து கிடந்த மின்கம்பங்களை அகற்றி அதற்குப் பதிலாக புதிய மின்கம்பங்களை அமைத்தனர். மேலும் சாலைகள் மற்றும் வீடுகள் மீது விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயிலை அனுபவித்து வந்த மக்களுக்கு, இந்த கோடை மழை வெப்பத்தை தணிந்து குளிர்ந்த காற்றைத் தந்து குளிர்ச்சியடைய வைத்துள்ளது.