ஹெல்பே இல்லாத ஹெல்ப்லைன் நம்பர்கள்… கழுவி ஊற்றும் பொதுமக்கள்!!

By Narendran SFirst Published Nov 8, 2021, 11:29 AM IST
Highlights

மழை மற்றும் வெள்ளம் குறித்த புகார்களை தெரிவிக்க சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட உதவி எண்கள் அனைத்தும் வேலை செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கடந்த 6 ஆம் தேதி இரவு பெய்த மழை மறுநாள் காலை வரை நீடித்தது. இதனால் சென்னை வெள்ளக்காடானது. சாலைகள் எங்கும் வெள்ள நீர் தேங்கியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனிடையே வெள்ள நீர் அதிகம் தேர்ங்கியுள்ளதை அடுத்து பல சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னையில் கனமழை தொடரும் எனவும், 10 ,11 ஆம் தேதிகளில் அதி கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் 2015ஆம் ஆண்டு போல் மீண்டும் சென்னை வெள்ளத்தில் மூழ்கிவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏரிகள் தனது முழுகொள்ளளவை எட்டியுள்ளது. இதை அடுத்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. குறிப்பாக செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 2000 கன அடியும், புழல் ஏரியிலிருந்து 2000 கன அடியும் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை மற்றும் வெள்ளம் குறித்த புகார்களை தெரிவிக்க சென்னை மாநகராட்சி உதவி எண்களை வெளியிட்டது. 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய உதவி எண்களுக்கு தொடர்புக்கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி, 9445477205  எண்ணிற்கு வாட்ஸாப் மூலமாகவும் புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்மழை காரணமாக அவதிக்குள்ளான மக்கள் சென்னை மாநகராட்சி வெளியிட்ட எண்களுக்கு அழைத்துள்ளனர். ஆனால் கொடுக்கப்பட்டுள்ள எந்த எண்களுக்கும் ரிங் போகவில்லை என கூறப்படுகிறது. வாட்ஸ் அப் நம்பருக்கு மெசேஜ் அனுப்பியும் அதனை யாரும் பார்க்கவில்லை என கூறப்படுகிறது.

இதேபோல் தமிழ்நாடு மாநில பேரிடர் மேனேஜ்மெண்ட் அத்தாரிட்டி சார்பில் கொடுக்கப்பட்ட ஸ்டேட் ஹெல்ப் லைன் எண் 1070 என்கிற நம்பரும், வாட்ஸ் அப் நம்பரான 94458 69848ம் மக்களுக்கு எந்தவித பயனும் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் மழையில் சிக்கிக் கொண்டிருக்கும் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். மக்கள் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி அவதிப்படுவதை தடுக்க மாநகராட்சி உதவி எண்களை வெளியிட்டாலும் அதனை அதிகாரிகள் கண் துடைப்பிற்காக வெளியிட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்கள் தங்களுக்கு உதவி வேண்டி தொடர்பு கொள்ளும் போது கொடுக்கப்பட்ட எண்கள் வேலை செய்யாமல் இருப்பது அவர்களை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும். எனவே இன்னலில் சிக்கி இருக்கும் மக்களுக்கு உதவும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் உதவி எண்களின் செயல்பாடுகளை அதிகாரிகள் கவனித்து அதனை முறைப்படுத்தி இதுபோன்ற இன்னல்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

click me!