மக்களே அலெர்ட் ! பைக்கில் பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. நாளை முதல் அமல்.!

By Raghupati RFirst Published May 22, 2022, 7:55 AM IST
Highlights

Helmet : 23 ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சென்னையில் 2021-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளை பகுப்பாய்வு செய்ததில், இரு சக்கர வாகன விபத்துக்களில் 611 பேர் உயிரிழந்துள்ளனர். 

3,294 பேர் காயம் அடைந்ததுள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால் 477 இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் 134 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,929 இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் 365 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 1 ம் தேதி முதல் மே மாதம் 15ம் தேதி வரை சென்னையில் மட்டும் இருச்சக்கர வாகன விபத்தில் 98 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதில் 80 பேர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதால் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 18 பேர் பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாததால் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த 5 மாதங்களில் இரு சக்கர வாகனம் மூலமாக 841 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 741 பேர் இருசக்கர வாகன ஓட்டிகள் என்றும், 127 பேர் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்தவர்கள் என சென்னை போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் உயிரிழப்பவர்கள் மற்றும் காயமடைவோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சென்னை காவல்துறை நடவடிக்கை எடுக்கவுள்ளது. அந்தவகையில், இருசக்கர வாகனத்தில் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும், 23.05.2022 திங்கட்கிழமை முதல் சென்னை பெருநகர காவல்துறை இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரும் ஹெல்மெட் விதிகளைக் கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான சிறப்பு வாகன தணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காக்கவும், விபத்தில்லா நகரை உருவாக்கவும் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Petrol Price : அதிரடியாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.! எவ்வளவு தெரியுமா ?

இதையும் படிங்க : சர்ச்சையில் சிக்கிய லியோனி..முட்டுக்கட்டை போடும் பாஜக.. விரைவில் கைதா ? பரபரப்பு !

click me!