
தென்மேற்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி தொடர்வதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையிலும் மா நகரில் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்துவருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் வட பகுதியான சென்னையைப் பொருத்தவரை கிழக்கு திசையில் இருந்து காற்று வீசினால்தான் அதிக மழை பெய்ய வாய்ப்பு உண்டு. ஆனால் பலமான காற்று இதுவரை வீசவில்லை. வடகிழக்குப் பருவ மழை தொடங்கும்போதுதான் சென்னைக்கு அதிக மழை பெய்யும். வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறி இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தெரிந்துவிடும்.
மேலும் அடுத்த வாரம் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தற்போது தென்மேற்குப் பருவ மழை இறுதிக் கட்டத்தில் உள்ளதால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியிலும், தமிழக ஆந்திர எல்லைகளிலும் பலத்த மழை பெய்யும்.
இதன் காரணமாக பாலாறு, தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.