
சந்தானம், படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஹீரோதான் என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார். சக்கைபோடு போடு ராஜா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஆர்யா இவ்வாறு பேசினார்.
நடிகர் சந்தானம், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நிறுவனத்துடன் இணைந்து மூன்றாம் கட்டளையில் திருமண மண்டபம், கட்டுவதற்காக ரூ.3 கோடி முன் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நிறுவனத்தின் மேலாளர் சண்முக சுந்தரம், 3 ஆண்டுகளாக மண்டபத்தை கட்டிக்கொடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் வழக்கறிஞருக்கும் சந்தானத்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் வழக்கறிஞரை, சந்தான தாக்கியுள்ளார். இதில் வழக்கறிஞரின் மூக்கு உடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, வழக்கறிஞர் சார்பில் சந்தானத்தின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து நடிகர் சந்தானம் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தார். நீதிமன்றமும் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் நடிகர் சந்தானம் நடித்த சக்கை போடு போடு ராஜா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
சக்கைபோடு போடு ராஜா திரைப்படத்தில் சந்தானம், ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வருகிறார். தான் கதாநாயகநாக நடித்த ஆக்ஷன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, சில சாம்பிள்களைக் சந்தானம் காட்டியுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
அதாவது சென்னை வளசரவாக்கத்தில் வழக்கறிஞருடன் ஏற்பட்ட தகராறில் வழக்கறிஞர் கடுமையாக தாக்கப்பட்டதை நெட்டிசன்கள் கூறி கலாய்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டார். அப்போது. சந்தானம் படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஹீரோதான் என்றார். அடி கொடுத்த சந்தானத்துக்கே கையில் காயம் உள்ளது என்றால் அடி வாங்கியவரின் நிலை என்னவாகியிருக்கும் என்றும் ஆர்யா பேசியது, விழாவையே கலகலப்பாக்கியது.