அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக இந்த மாத தொடக்கத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக 4, 5 ஆகிய தேதிகளில் மிக அதிக கனமழை வெளுத்து வாங்கியதால் சென்னை நகரமே தண்ணீரில் தத்தளித்தது. இதே போல் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பின்னர் வெள்ளநீர் வெளியேற்றப்பட்ட நிலையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளது.
இந்த நிலையில் குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக நெல்லையில் மட்டும் 11 இடங்களில் கனமழை பெய்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் இன்றும் நாளையும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், ராமநாதபுரம், விழுப்புரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. நாளையும் இந்த கனமழை தொடரும் என்றும் வரும் செவ்வாய்க்கிழமை முதல் மழை குறையக்கூடும் என்றும் கூறியிருந்தது.
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, க்டலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.