இன்று 6 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த பகுதிகளில் அடித்து ஊற்றப்போகும் மழை.. வானிலை அப்டேட்

By Thanalakshmi VFirst Published Oct 22, 2022, 3:10 PM IST
Highlights

‌தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய  மாவட்டங்களில்‌ இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” நேற்று அந்தமான்‌ கடல்‌ மற்றும்‌ தென் கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில்‌ நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று காலை அக்டோபர்‌ 22ஆம்‌ தேதி 08.30 மணி அளவில்‌ தென்கிழக்கு மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌, போர்ட் பிளேர்க்கு மேற்கு- வடமேற்கு திசையில்‌ 110 கிலோ மீட்டர்‌ தொலைவிலும்‌, சாகர்‌ தீவுக்கு தெற்கு- தென்கிழக்கு திசையில்‌ 1460 கிலோ மீட்டர்‌ தொலைவிலும்‌ நிலை கொண்டுள்ளது. 

இது வடமேற்கு திசையில்‌ நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ அக்டோபர்‌ 23ஆம்‌ தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்‌. பின்னர்‌ வடக்கு- வடகிழக்கு திசையில்‌ நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ அக்டோபர்‌ 24ஆம்‌ தேதி காலை புயலாக வலுபெறக்கூடும்‌. அதன்‌ பின்னர்‌ வடக்கு- வட கிழக்கு திசையில்‌ நகர்ந்து அக்டோபர்‌ 25 ஆம்‌ தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில்‌ டிங்கோனா இவு மற்றும்‌ சந்திவிப்‌ இடையில்‌ கரையை கடக்கும்‌.

22.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ செங்கல்பட்டு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

23.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌

24.10.2022 மற்றும்‌ 25.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

26.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் படிக்க:வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.. அக்.24 ஆம் தேதி புயலாக வலுப்பெறும் - வானிலை

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மேலும் படிக்க:இன்று 28 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை தொடரும்.. வானிலை மையம் எச்சரிக்கை..

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில்‌ மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!