
ஈரோடு
பட்டு நூல் வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் கைத்தறி நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கைத்தறி சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் அதனைச் சார்ந்த தொழில் செய்பவர்கள் சங்கம் சார்பில் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை வாரச்சந்தை அருகே போராட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.எஸ்.பழனிச்சாமி தலைமை வகித்தார். இதில், செயலாளர் ரங்கராஜன், ஒருங்கிணைப்பாளர் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில், "சைனா பாவு, கோரா பாவு, பட்டு பாவு, பட்டு ஊடை, ஜரிகை ஆகியவை கிடைக்காத காரணத்தினால் கைத்தறி நெசவாளர்களும், அதனை சார்ந்த தொழில் செய்யும் இலட்சக்கணக்கானோரும் வேலை இழந்துள்ளார்கள்.
இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பட்டு நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்,
மத்திய - மாநில அரசே பட்டு நூல் வரியை குறைக்க வேண்டும்" உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த்ப் போராட்டத்தில் சத்தியமங்கலம், டி.ஜி.புதூர், தொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், புஞ்சைபுளியம்பட்டி, சதுமுகை, கெம்மநாயக்கன்பாளையம், அரசூர், வாகராயம்பாளையம், அந்தியூர், கணக்கம்பாளையம் உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான கைத்தறி நெசவாளர்கள் பங்கேற்றனர்.