
குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு வரும் 9ஆம் தேதி வெளியாகும் என டி.என்.சி.எஸ்.சி. தலைவர் அருள்மொழி தெரிவித்தார்.
அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 5 ஆயிரத்து 451 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு, தமிழகம் முழுவதும் இன்று 301 மையங்களில் நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 15 லட்சத்து 64 ஆயிரத்து 471 பேர் இத்தேர்வை எழுதியுள்ளனர்.
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இத்தேர்வை கண்காணிக்க 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட தலைமை கண்காணிப்பாளர்களும், 566 பறக்கும் படையினரும் அமைக்கப்பட்டதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வில், 67,156 பேர் பங்கேற்றனர். தேர்வை கண்காணிக்க 41 நடமாடும் குழுக்களும், 24 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டன. மேலும், வீடியோ கேமராக்கள் மூலமும் தேர்வு கண்காணிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 141 மையங்களில் 55,957 பேர் தேர்வு எழுதினர். கண்காணிப்பு பணியில் 190 வருவாய் அலுவலர்களும், 20 பறக்கும் படையினரும் ஈடுபட்டனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் நடந்த தேர்வு மையத்தில், டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது.
85 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு வரும் 9ஆம் தேதி வெளியாகும். இந்த அறிவிப்பினை தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இளையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும், தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுதுபவர்கள் இணையதளத்தில் நாளை அறிவிக்கப்பட உள்ள திருத்தி அமைக்கப்பட்ட வரையறையை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றார்.