
ஜல்லிகட்டுக்கு ஆதரவாக களம் இறங்கினார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்… சேலத்தில் உண்ணாவிரதம்…
உச்ச நீதிமன்றத்தின் தடை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை.
சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக தீர்ப்பு வழங்கமுடியாது என கூறியது. இதனால், தமிழக மக்கள் கொதித்து எழுந்துள்ளனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில், நேற்று பிரமாண்டமான போராட்டம் நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற இந்த போராட்டத்தின் முடிவில் பெண்கள்உட்பட ஏராளமானோர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர், நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் இயக்குநர்கள் பாரதிராஜா,அமீர்,கரு.பழனியப்பன், இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்றோரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொம்பு வச்ச சிங்கமடா என்ற பாடலை உருவாக்கி வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்துரை அடுத்த தளவாய்புரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தடையை மீறி ஜல்லிகட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டார்.
அவருடன் பாடகர் அருண்குமார், இயக்குநர் சண்முகம் ஆகியோரும் பங்கேற்றனர். ஆனால் போலீசார் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்காததால் அவர்கள் அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் பாராம்பரியத்தை பாதுகாக்க இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டு தானும் களத்தில் குதித்துள்ளதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார்.