
தமிழகம் உட்பட நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 1ம் தேதி ஆயுத பூஜையும், 2ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இந்த இரு தினங்களும் அரசு விடுமுறை என்ற நிலையில், அடுத்ததாக வரக்கூடிய அக்டோபர் 3ம் தேதி வெள்ளிக் கிழமையும் விடுமுறை அளிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் அமிர்தகுமார் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “அக்டோபர் 1ம் தேதி ஆயுத பூஜை, 2ம் தேதி விஜயதசமி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவை புதன், வியாழன் கிழமைகளில் வருகிறது. தொடர்ந்து அக்டோபர் 3ம் தேதி வேலை நாளாக உள்ளது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 4, 5ம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் விடுமுறை தினங்களாகும்.
எனவே அக்டோபர் 3ம் தேதி ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அறிவித்தால், 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். அதன் மூலம் தசரா பண்டிகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு திங்கள் கிழமை பணிக்கு வருவார்கள். எனவே 3ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என கோருகிறோம்” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.