
திண்டுக்கல்
மாடுகளை இறைச்சிக்காக விற்க தடை போட்டதால் வாரச் சந்தையில் ஆடுகளின் விற்பனை அமோகமாக நடந்தது. வணிகர்கள் கூட்டத்தால் சந்தை களை கட்டியது.
திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தையாக ஐயலூர் இருக்கிறது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு மற்றும் கோழி விற்பனை நடைபெறும்.
இங்கு ஐயலூரைச் சுற்றியுள்ள வடமதுரை, கடவூர், எரியோடு, காணப்பாடி, எலமனம் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவருவர்.
மாவட்டத்திலேயே ஐயலூர் சந்தையில்தான் அதிகளவில் ஆடுகள் விற்பனை செய்யப்படுவதால் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்களும் ஆடு மற்றும் கோழிகளை விலைக்கு வாங்க அதிகளவில் ஐயலூர் சந்தைக்குதான் வருவவதால் போட்டிப் போட்டு ஆடுகளை வணிகர்கள் வாங்கி செல்கின்றனர்.
வறட்சியின் காரணமாக ஆடுகளுக்கு போதிய தீவன வசதி இல்லாததால் ஆடுகளின் விலை குறைந்திருந்தது. 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்ததால் ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது.
நேற்றுச் சந்தையில் ஆடு, கோழிகள் வாங்க வணிகர்கள் கூட்டம் அலைமோதியது. சரக்கு வாகனங்களில் குவிந்ததால் திருவிழா கூட்டம் போல் சந்தை களை கட்டியது.
நேற்று 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.3 ஆயிரத்து 500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விலை போனதால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், கோழிகள் எதிர்பார்த்தபடி விலை போகவில்லை.
இதுகுறித்து வணிகர்கள் கூறியது, “தற்போது இறைச்சிக்கு மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் கோவில் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெறுவதும் ஆடுகளின் விலை உயர்வுக்கு காரணம் என்றனர்.