
கோவையில் பணம் நூதன முறையில் கடத்தல் : போதைப்பொருள் கடத்தல் பல்வேறு மாநிலங்களில் இருந்து சாலை மார்க்கமாக தமிழகத்திற்குள் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டுள்ளது. இதனையடுத்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட எல்லோர பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாள் தோறும் மூட்டை மூட்டையாக போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் இருந்து கேரளாவிற்கும், கேரளாவில் இருந்து கோவை பகுதிக்குள் வரும் வாகனங்களை இரு மாநில போலீசாரும் சோதனை மேற்கொண்டர்.
கோவையை அடுத்த தமிழக கேரள எல்லையான வேலந்தாவளம் பகுதியில் நேற்று மாலை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவை வழியாக கேரளாவிற்குள் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற இரு சக்கர வாகனத்தை வழிமறித்து போலீசார் சோதனை மேற்கொண்டர். அப்போது பிரத்தியேக உடையில் கட்டு கட்டாக ரூ.70 லட்சம் பணம், 200 கிராம் தங்கம் கடத்தியது கண்டறியப்பட்டது. சட்டைக்குள் பல மறைவான பாக்கெட்டுகளை கொண்ட உடையில் பல இடங்களில் மறைத்து வைத்திருந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர். இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் கோவையை சேர்ந்த சாகர், மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
பணம் கடத்துவதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஜாக்கெட்டில் வைத்து பணம் கடத்தி வந்தது தெரிந்த நிலையில், இந்தப் பணம், நகை எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்தும், இது ஹாவாலா பணமா என்பது குறித்தும் கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.