
அரியலூர்
அரியலூரில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்த நான்கு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த காவலாளர்கள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், தா. பழூர் காவலாளர்கள் நேற்று இரவு சுற்றுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாழைகுறிச்சி அருகேச் சென்றுக் கொண்டிருந்த மாட்டு வண்டிகளை மடக்கி காவலாளர்கள் சோதனை செய்தனர்.
அப்போது தாதம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து (44), ராஜேந்திரன் (55), மணிவேல் (47) ஆகியோர் அனுமதியில்லாமல் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்ததை காவலாளர்கள் கண்டுபிடித்தனர்.
மேலும், சோழமாதேவி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த கோடாலிகருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (35) உள்ளிட்ட நால்வருடைய மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
மணல் எங்கு, யாருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்று அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் நால்வரிடமும் உடையார்பாளையம் கோட்டாட்சியர் ப. டினாகுமாரியும் விசாரணை நடத்தி வருகிறார்.