
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான டீக்கடைகள் அல்லது பலகார கடைகளில் வடை, போண்டா, பஜ்ஜி போன்ற பலகாரங்களை அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் வைத்து விற்பனை செய்கின்றனர். பலகாரங்கள் சாப்பிட செல்லும் பலர், அந்த காகிதத்தில் பலகாரங்களை ஒரு அழுத்து அழுத்திவிட்டு சாப்பிடுவது வழக்கம். அப்படி சாப்பிடும் பொழுது அதில் உள்ள எண்ணெயை நியூஸ் பேப்பர் உறிஞ்சி விடுவதாக நினைக்கிறோம். ஆனால் அவ்வாறு செய்வதன் மூலமாக பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
செய்தித்தாள்களில் அச்சிடப் பயன்படுத்தப்படும் மையில் காரியம் என்னும் நச்சு உள்ளது. இது உடலுக்குள் சென்று சிறுநீரகம், கல்லீரல், தசை வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி ஆகியவற்றில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். வயிற்றுக்குள் செல்லும் பொருட்கள் கழிவாக வெளியேறுவது வழக்கம். ஆனால் காரியம் கழிவாக வெளியேறுவதில்லை. அது உடலில் சேர, சேர கெடுதல்களை அதிகரித்துக் கொண்டே செல்லும். மேலும் அச்சு மையை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் அபாயங்களும் அதிகரிக்கக்கூடும். அச்சிடப்பட்ட காகிதங்களில் இருக்கும் ரசாயனங்கள், செயற்கை நிறங்கள் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தலாம்.
அச்சிட பயன்படுத்தப்படும் மையில் காரியம், குரோமியம், கிராபைட் ஆகிய ரசாயனங்கள் கலந்துள்ளது. காரியம் அதிகமாக சேரும் பொழுது ஞாபகம் மறதி பிரச்சனைகளும், கிராபைட் உறுப்புகளில் தங்கும் தன்மை இருப்பதால் உள் உறுப்புகளில் பிரச்சனையையும் ஏற்படுத்தலாம். எனவே செய்தித்தாள்களை பயன்படுத்த வேண்டாம் என உணவு கட்டுப்பாட்டு துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களான பஜ்ஜி, வடை, போண்டா, முறுக்கு போன்ற தின்பண்டங்களை அச்சடிக்கப்பட்ட காகிதம், செய்தித்தாள்கள், பிளாஸ்டிக் பேப்பர்களில் கட்டிக் கொடுக்கக் கூடாது என உணவு பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.
மேலும் விற்பனையாகாமல் மீதமாகும் உணவை நுகர்வோருக்கு வழங்காமல், அப்புறப்படுத்த வேண்டும் என்றும், உணவு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மஞ்சள் காமாலை, டைபாய்டு உள்ளிட்ட தடுப்பூசியை செலுத்தி இருக்க வேண்டியது அவசியம் என உணவு பாதுகாப்புத் துறை கூறியுள்ளது. மேலும் உணவு நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து, அறிக்கை வைத்திருக்க வேண்டும். உணவுப் பொருட்களை ஈக்கள் வைக்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைக்க வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளும் கூறப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல், உணவு வணிகர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச. சான்றிதழ் வைத்திருக்க வேண்டும், எண்ணெயை ஒருமுறை மட்டுமே சமைக்க வேண்டும், மீதமான உணவு எண்ணெய்யக அங்கீகரிக்கப்பட்ட கொள்முதலாளர்களுக்கு மட்டுமே விற்க வேண்டும். அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருட்களை சூடாகவோ அல்லது இயல்பு நிலையிலோ பொட்டலம் போடுவதை தவிர்க்க வேண்டும். உணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர் அலுமினியம் பாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உணவை கையாளுபவர்கள் கையுறை தலைமுடி கவச அணிந்திருக்க வேண்டும். சமைக்க மற்றும் உணவு தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே இருக்க வேண்டும். அயோடின் கலக்காத உப்பை உணவகங்களில் வைத்திருத்தல் கூடாது. சிக்கன் 65, கோபி 65, பஜ்ஜி போன்ற பொருட்களில் செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது. பொட்டலம் இடப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் பொழுது FSSAI உரிம எண்ணுடன் கூடிய முழுமையான லேபிள் விபரங்கள் இருக்க வேண்டும் போன்ற 14 முக்கிய வழிகாட்டுதல்களை உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிட்டுள்ளது.
உணவகங்கள் இந்த அறிவிப்பை கண்ட 14 நாட்களுக்குள் மேற்கூறிய நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.