
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில், தை அமாவாசை நாளில் புனித நீராட படகில் சென்ற பத்து பேரும் கடலின் ஆழமான பகுதியில் குதித்ததால் ஒரே கிராமத்தை சேர்ந்த ஐந்து மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மீதமுள்ள ஐவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் சன்னதி கடலில் தை அமாவாசையையொட்டி ஏராளமான அடியார்கள் புனித நீராடுவது வழக்கம்.
அதன்படி புனித நீராடுவதற்காக வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் மகன் ரகுன் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் 20-க்கும் மேற்பட்டவர்கள் வேதாரண்யம் சன்னதி கடலுக்கு வந்தனர்.
கடலில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் படகு சென்றபோது இவர்கள் புனித நீராடுவதற்காக படகில் இருந்து கடலில் குதித்தனர். அந்தப் பகுதியில் ஆழம் அதிகமாக இருந்ததால் கடலில் குதித்த ஆறுகாட்டுத்துறை கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் பிரவீன்குமார் (19), சிவஞானம் மகன் பரத் (16), அருள்ராஜ் மகன் யுகேந்திரன் (18), பொன்னுதுரை மகன் கனிஷ்கர் (18), சுப்பிரமணி மகன் ராஜாமணி (17), வேதராமன் (19), நிதிஷ்குமார் (17), பிரசன்னகுமார் (21) ஆகிய பத்து பேர் கடலில் மூழ்கி மாயமாகினர்.
மற்றவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். இதனைத் தொடர்ந்து கடலில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணியில் அப்பகுதி மீனவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
இதில், பிரவீன்குமார், பரத், யுகேந்திரன், கனிஷ்கர், ராஜாமணி ஆகிய ஐவரும் கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.
சசின் (17), குகன் (19) ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கடலில் இருந்து மீட்கப்பட்ட வேதராமன் (19), நிதிஷ்குமார் (17) பிரசன்னகுமார் (21) ஆகிய மூவரும் பேர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இறந்த ஐவரில் பரத் தோப்புத்துறை கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். யுகேந்திரன் தஞ்சையில் உள்ள கல்லூரியில் கேட்டரிங் படித்து வந்தார். பிரவீன்குமார், ராஜாமணி, கனிஷ்கர் ஆகியோர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்தனர்.
இவர்கள் ஐவரின் உடல்களும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடலில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களை பார்த்து அவர்களுடைய உறவினர்கள் கதறி கதறி அழுதனர்.
இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மும்தாஜ்பேகம், வேதாரண்யம் காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரே கிராமத்தை சேர்ந்த 5 மாணவர்கள் கடலில் மூழ்கி பலியான சம்பவம் வேதாரண்யம் பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.