மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு காண வேண்டும் – மத்திய அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை…

First Published Nov 6, 2017, 6:30 AM IST
Highlights
fishermen demanded to solve the srilankan navyforce issue


இராமநாதபுரம்

மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு காண இருநாட்டு அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கியும், அவர்களைச் சிறைபிடித்தும் வருகின்றனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் 31–ஆம் தேதி முதல் இதுவரை இராமேசுவரத்தை சேர்ந்த 29 பேர், மண்டபத்தைச் சேர்ந்த எட்டு பேர், நாகபட்டினத்தைச் சேர்ந்த 12 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 26 பேர், காரைக்காலைச் சேர்ந்த 10 பேர் என மொத்தம் 85 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் மற்றும் வௌனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இராமேசுவரம் மீனவர்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை:

“இருநாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இந்திய அரசும், இலங்கை அரசும் அவ்வப்போது அதிகாரிகள் மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. மேலும் இருநாட்டு மீனவர்கள் சார்பிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதனால் எவ்வித பயனும் இல்லை.

தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களையும், படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் செல்வது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இலங்கை கடற்படையினர் இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்களை கைது செய்வதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

இதுகுறித்து மண்டபம் மற்றும் சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து மௌனம் காத்து வருவது மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு காண இரண்டு நாட்டு அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இலங்கை கடற்படை தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

மத்திய அரசு இது தொடர்பாக இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டம் தொடங்கும் வகையில் மீனவர்கள் நிம்மதியாக இலங்கை கடற்படையினரின் தொல்லையில்லாமல் மீன்பிடிக்க மத்திய–மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

click me!