திருவண்ணாமலை அருகே வங்கி கடனை வசூலிக்க வந்தவர்கள் தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார். இறந்தவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை அருகே சாத்தனூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் வங்கியில் கடன் வாங்கியுள்ளார். நீண்ட நாட்கள் ஆகியும் அவர் வங்கி கடனை திருப்பி செலுத்தவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், இன்று கடனை வசூலிக்க வந்த வங்கி ஊழியர்கள் தாக்கியதில் விவசாயி ஞானசேகரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஞானசேகரன் உயிரிழந்தார்.
இதைதொடர்ந்து உறவினர்கள் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பேச்சு நடத்தியும் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். வங்கி மேலாளரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.